Thursday, June 23, 2011
சகுனி படத்தை தொடர்ந்து கார்த்தி அடுத்து டைரக்டர் சுராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க போவதாகவும், அதில் கார்த்திக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பருத்திவீரன் முதல் சிறுத்தை வரை நடித்த எல்லா படமே சூப்பர் ஹிட்டாகி முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் சேர்ந்து விட்ட கார்த்திக்கு அடுத்த வாரம் ஜூலை 3ம் தேதி கோவையில் திருமணம் நடைபெற இருக்கிறது. ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனி என்ற பெண்ணை திருமணம் செய்கிறார். திருமணம் நாள் நெருங்கிவிட்டதால் திருமண வேலைகளில் பிஸியாக இருக்கும் கார்த்தி, புதுமுக இயக்குநர் சங்கர்தயால் இயக்கும், சகுனி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சகுனி படத்திற்கு அடுத்து கார்த்தி, தலைநகரம், மருதமலை, படிக்காதவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய டைரக்டர் சுராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க போவதாக கூறப்படுகிறது. கார்த்திக்காக அருமையான கதை ஒன்றை ரெடி பண்ணி வைத்திருக்கிறாராம் சுராஜ். மேலும் இந்தபடத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கப்போவதாகவும் ஒரு தகவல். ஏற்கனவே சிறுத்தை படத்திலேயே அனுஷ்கா தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அப்போது அனுஷ்கா பிஸியாக வேறு படங்களில் நடித்து கொண்டிருந்ததால் கார்த்தியுடன் சிறுத்தை படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. முன்னதாக சிறுத்தையின் ஒரிஜனல் ரீ-மேக்கான விக்ரமார்க்குடு படத்தில் அனுஷ்கா தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.