வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய படங்களுக்கு பெரிய ஓப்பனிங் இருக்கிறது என்று மீடியாவில் அடிக்கடி சொல்கிறீர்கள். இதை மனதில் வைத்தே என்னுடைய படங்கள் வெளியாகும் நேரத்தில் என்னை பற்றியோ, அல்லது என் படம் சம்பந்தமாகவோ ஏதாவது ஒரு வதந்தியை கிளப்பிவிடுகிறார்கள். இதனால் என்னுடைய படத்திற்கான ஓப்பனிங் குறையும் என்ற எண்ணம்தான் காரணம். இது மட்டுமில்லாமல் என்னுடைய ரசிகர்களை குறிவைத்து பல புகார்களை கூறி அவர்களை கஷ்டப்படுத்துவதும் நடக்கிறது. இதனால் என் மீதும், என் ரசிகர்கள் மீதும் மக்களுக்கு ஒரு கோபத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் சிலர். இதுவும் நான் என் மன்றங்களை கலைப்பதற்கு ஒரு காரணம். என் மீதான கோபத்தை என் ரசிகர்கள் மீது காட்டுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. இன்று மன்றங்களை கலைத்துவிட்டேன். இப்போது வேண்டுமானால் என்னை தாக்குங்கள். இனியும் என் ரசிகர்களை தாக்க வேண்டாம், என்று கூறியிருக்கும் அஜீத், தனக்கு எதிரிகள் அரசியலில் இல்லை என்றும்; சினிமாவில்தான் ஒரு சில எதிரிகள் இருக்கிறார்கள். அவர்கள் அரசியலிலும் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதும் எனக்கு நன்றாக தெரியும் என்றும் சூசகமாக பேசியிருக்கிறார். அஜீத்தின் முந்தைய படங்கள் ரிலீஸ் ஆகிற நேரங்களில் அவரது ரசிகர் மன்றங்கள் சார்பில் விழா எடுக்கப்படும். தியேட்டர் வாசல்களில் கட்-அவுட், ஆளுயுர மாலை, பாலாபிஷேகம் என அமர்க்களப்படும். மங்காத்தா ரிலீஸ் ஆகவிருக்கும் நிலையில் அவரது ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். அந்த குழப்பங்களை போக்கவும், ரசிகர்களை மீண்டும் அரவணைத்து செல்லும் விதத்திலும் அஜீத் இப்படி கூறியிருக்கலாம் என்ற கருத்து திரையுலகில் நிலவுகிறது. |