

விசாரணையின் அடிப்படையில் இயக்குனர் சீமான் மீது 417(நம்பிக்கை மோசடி), 354 (மானபங்கம்), 420 (மோசடி), 376 (கற்பழிப்பு), 506(1) (கொலைமிரட்டல்) மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த பிரிவுகள் ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகள் என்பதால் இயக்குனர் சீமான் தலைவறைவாக உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே இயக்குனர் சீமானின் வழக்கறிஞர் சந்திரசேகர், சீமானுடைய வளர்ச்சியை பொறுக்காமல் சிலர் திட்டமிட்டு நடிகை விஜயலெட்சுமியை வைத்து பொய்புகார்கள் அளித்துள்ளனர். சட்டப்படி அதை சந்திப்போம். நடிகை விஜயலெட்சுமி மீது மானநஷ்டவழக்கு தொடருவோம் என்று கூறியிருந்தார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமானின் வழக்கறிஞர் சந்திரசேகர் வழக்கு சம்பந்தமாக சீமானை எதுவும் விசாரிக்காமல் போலீசார் கடுமையான பிரிவின் கீழ் வழக்கு போட்டுள்ளனர் என்று கூறினார்.
இதற்கிடையே இயக்குனர் சீமான், நடிகை விஜயலெட்சுமியின் பொய் புகாரை சட்டப்படி சந்திப்பேன். வழக்கை சந்திக்காமல் நான் தலைமறைவாகவில்லை. நான் அப்படிப்பட்ட கோழையல்ல. நடிகை விஜயலெட்சுமிக்கு உதவி செய்தது இந்த அளவுக்கு கொண்டு வந்துவிட்டுள்ளது. எனது அரசியல் எதிரிகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டை சட்டப்படி சந்திப்பேன். இது போன்ற செயல்கள் மூலம் தமிழர் நலனுக்கான எனது போராட்டத்தை தடுத்துவிடமுடியாது என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் சீமானை சிக்க வைப்பதற்காக தி.மு.க. பிரமுகர் ஒருவர் நடிகை விஜயலெட்சுமியை கமிஷனரிடம் அழைத்துச்சென்றதாக கூறப்படுகிறது.