அந்த காலத்தில் அழகான கதாநாயகிக்காக பஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக அலைந்தோம்; ஆனால் இப்போது அழகான கதாநாயகிகள் சுலபமாக கிடைக்கிறார்கள் என்று டைரக்டர் பாரதிராஜா மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். நடிகர் மற்றும் டைரக்டர் பாண்டியராஜனின் மகன் பிரித்வி கதாநாயகனாக நடிக்கும் "பதினெட்டான்குடி" என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தனராக டைரக்டர் பாரதிராஜா கலந்து கொண்டு பேசுகையில் தன் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசியதாவது: நான் பதவிக்காக அலைபவன் அல்ல. இந்த மண்ணையும், மனிதர்களையும் நேசிப்பவன். தமிழ் கலாசாரத்தை நேசிப்பவன். என் படங்களில், கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர், நடிகைகளை தேடிப்பிடிப்பேன். அந்தக்காலத்தில் அழகான புதுமுகங்களை தேடி ரோடு ரோடாக அலைந்திருக்கிறோம். பஸ் ஸ்டாண்ட் பஸ்டாண்டாக அலைந்திருக்கிறோம். ஹோட்டல்களிலும் அழகான பெண்களை தேடி அலைந்து இருக்கிறோம். மண்வாசனை படத்துக்காக கதாநாயகியை தேடியது இன்றும் நினைவில் இருக்கிறது. அந்த படத்துக்காக முதலில் நடிகை ராகினியின் மகளைத்தான் பார்த்தேன். அவர் நடிக்க மறுத்து விட்டார். அப்புறம் ஷோபனாவை பார்த்தோம். கடைசியாக, ரேவதியை தேர்வு செய்தோம். இப்போதெல்லாம் சினிமாவுக்கு அழகு அழகான பெண்கள், மிக சுலபமாக கிடைக்கிறார்கள். ஜெயம் ரவி, சாந்தனு, பிரித்வி போன்ற முகவசீகரமுள்ள கதாநாயகர்களும், திறமையான இளம் டைரக்டர்களும் வந்துகொண்டே இருக்கிறார்கள். இங்கே, ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்ற பாடலை ஒளிபரப்பி, 1300 தாமரை மொட்டுகளுடன் கூடிய மாலையை எனக்கு அணிவித்தார்கள். இந்த கவுரவம்தான் 35 ஆண்டுகளில் நான் சம்பாதித்த சொத்து. சினிமாவில், வெற்றி முக்கியம்தான். ஆனால், ஒரே ஒரு வெற்றியை கொடுத்ததும், அதை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு நடக்க முடியாமல் நடந்து செல்லக் கூடாது. எனக்கு 70 வயது ஆகிவிட்டது. ஆனால், மனதை மட்டும் இளமையாக வைத்துக்கொள்கிறேன். இன்னும் 20 வருடங்களுக்கு என் பெயர் சொல்கிற மாதிரி ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறேன். இவ்வாறு பாரதிராஜா பேசினார்.நிகழ்ச்சியில் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்& டைரக்டர் பாண்டியராஜன், நடிகர்கள் ஜெயம் ரவி, சாந்தனு, பிரித்வி, சிங்கம்புலி, யோகிஸ்வரன் கவிஞர் சினேகன், படத்தின் டைரக்டர் என்.சுந்தரேஸ்வரன், ஒளிப்பதிவாளர் செந்தில்குமார், இசையமைப்பாளர் சரவண கணேஷ், பட அதிபர் ஆர்.ராஜேஷ் உள்ளளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்.