அலுவலகத்தை காலி செய்த பின்பும், அட்வான்ஸ் பணம் மற்றும் பொருட்களைத் தராத வீட்டு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நடிகை சோனா, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தார். சென்னை, கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் 2வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சோனா ஹெய்டன்; நடிகை. இவர், எதரியல் இன்டீரியர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். தன் நிறுவனத்திற்குத் தேவையான மரப்பொருட்கள் தயாரிப்பதற்கு, போரூர் அடுத்த ஆலப்பாக்கம், கணேஷ் நகரில் குடோன் ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தார். அந்த இடத்திற்கான மூன்றாண்டு ஒப்பந்தம், வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகிறது. இதற்கிடையில், தொழிற்சாலையை படப்பை பகுதிக்கு மாற்ற நினைத்த சோனா, இது தொடர்பான நோட்டீசை கடந்த மார்ச் 1ம்தேதி, தொழிற்சாலை இடத்தின் உரிமையாளரான ராமலிங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மூன்று மாதம் முடிந்தும் அட்வான்ஸ் பணத்தை ராமலிங்கம், சோனாவிற்கு தரவில்லை. அத்துடன், தொழிற்சாலையில் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து,வேறு பூட்டை போட்டு, உள்ளே உள்ள பொருட்களையும் அவர் தர மறுத்துள்ளார்.
இது தொடர்பாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் ஒன்றை நடிகை சோனா அளித்தார். அதில், 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் அட்வான்சை பெற்றுத் தருமாறு கூறியிருந்தார். மனுவை பரிசீலித்த மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி, சம்பவ இடம் சென்னை புறநகர் எல்லையில் உள்ள மதுரவாயல் போலீஸ் வரம்பிற்குள் வருவதால், புறநகர் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று அளிக்குமாறு பரிந்துரைத்தார். தொடர்ந்து, புறநகர் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தார். மனு குறித்து விசாரிக்குமாறு, சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது.