டைரக்டர் திருமலை வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து அவரது உறவு பெண்ணை கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்துள்ளனர். தி நகர், அகம் புறம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் டைரக்டர் திருமலை. இவர் தற்போது `காசே தான் கடவுளடா என்ற படத்தை இயக்கி வருகிறார். டைரக்டர் திருமலை திருமண நாளையொட்டி, தனது மனைவி நதியா மற்றும் குழந்தையுடன் ஏலகிரி மலைக்கு சென்றார். வீட்டில் அவரது அக்கா மகள் கல்லூரி மாணவி பூர்ணிமா தனியாக இருந்தார். பிற்பகல் 2 மணியளவில் சாலிக்கிராமம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. டைரக்டர் திருமலை வீட்டிலும் மின்சாரம் இல்லை. இதனால் அவரது அக்கா மகள் பூர்ணிமா காற்றுக்காக கதவை திறந்து போட்டுக்கொண்டு வீட்டு வாசலில் இருந்து உள்ளார். அப்போது மர்ம ஆசாமிகள் இருவர் வீட்டுக்குள் புகுந்து பூர்ணிமாவை கட்டிப் போட்டு, பீரோவில் இருந்த சுமார் 25 பவுன் நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை சம்பவம் குறித்து டைரக்டர் திருமலை கூறுகையில், கொள்ளையர்கள் 2 பேர் வந்துள்ளனர். 2 பேரும் தமிழில் பேசி இருக்கிறார்கள். பேண்ட்-சட்டை அணிந்து உள்ளனர். கொள்ளையர்களில் ஒருவர் உயரமாகவும், இன்னொருவன் குள்ளமாகவும் இருந்து உள்ளான். எனது அக்கா மகள் பூர்ணிமாவை சென்னையில் உள்ள கல்லூரியில் நேற்றுதான் முதலாவது ஆண்டு பட்டப்படிப்பு பிரிவில் சேர்த்து விட்டேன். நல்ல வேளையாக வீட்டில் பெரிய அளவில் நகைகள் எதுவும் வைக்கவில்லை. வங்கி லாக்கரில் நகைகளை வைத்து உள்ளேன். வெளியில் செல்லும்போது அணிந்து செல்வதற்காக சிறிதளவு நகைகளையும், குழந்தையின் நகைகளையும் மட்டும் வீட்டில் வைத்திருந்தோம். அந்த நகைகளைத்தான் கொள்ளையர்கள் எடுத்து சென்றுள்ளனர். எங்கள் வீடு உள்ள பகுதிகளில் அடிக்கடி இது போல் கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும், என்றார்.