என்றுமே விருதுக்காக மட்டும் நான் நடிப்பவன் அல்ல, ரசிகர்களின் ரசனை மற்றும் திருப்தி தான் முக்கியம் என்று கூறுகிறார் நடிகர் விக்ரம். விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா, அமலாபால் உள்ளிட்டோர் நடித்த "தெய்வத்திருமகள்" படம் கடந்தவாரம் ரிலீசாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. மனவளர்ச்சி குன்றிய 5வயது குழந்தை போல் நடிப்பில் அசத்தி இருக்கிறார் விக்ரம். விக்ரமுடன் அவரது மகளாக வரும் குழந்தை சாராவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நிச்சயம் இந்தபடத்திற்காக விக்ரமிற்கு இன்னொரு தேசிய விருது கிடைக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகாக கோவையில் உள்ள ஒரு தியேட்டருக்கு வந்த விக்ரம் ரசிகர்களின் முன் உரையாற்றினார். அப்போது பேசிய விக்ரம், இந்தபடத்தின் ஒவ்வொரு காட்சியும் பார்த்து, பார்த்து செதுக்கப்பட்டது. 5வயது குழந்தை என்னென்ன செய்யும் என்பதை உடன் இருந்து பார்த்து காட்சிகளை உருவாக்கினார் விஜய். படம் ரிலீசாவதற்கு முன்னர், தெய்வத்திருமகள் போன்ற படங்களை கல்லூரி மாணவர்கள் பார்க்க மாட்டார்கள் என சிலர் கூறினார்கள். ஆனால் இப்படம் வெளியாகி, 3 நாட்களாக கல்லூரி மாணவர்கள் தான் அதிகம் பேர் விரும்பிப் பார்ப்பதாக தியேட்டர் அதிபர்கள் கூறினர்.ஒருபக்கம் தூள், சாமி போன்ற படங்களையும் ரசிக்கிறார்கள். மற்றொருபக்கம் தெய்வத்திருமகள் போன்ற படங்களையும் மக்கள் ரசிக்கிறார்கள். மொத்தத்தில் படம் நன்றாக இருந்தால் மக்களாகிய ரசிகர்கள் எப்போதும் ரசிப்பார்கள். நான் என்றுமே விருதுக்காக நடித்தது இல்லை. மக்களுக்காக நடிக்கிறேன், மக்களின் ரசனைதான் ரொம்ப முக்கியம். கொடுக்கிற காசுக்கு அவர்கள் திருப்திகரமான படத்தை பார்த்தோம் என்று கூற வேண்டும். அதுவே என்னுடைய நோக்கம் என்று கூறினார்.