
Friday, June 10, 2011

தமிழ் திரையுலகில் புதுமுக நடிகைகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். பழைய கதாநாயகிகள் பட வாய்ப்புகள் இன்றி ஓரம் கட்டப்படுகிறார்கள். நம்பர் ஒன் இடங்களை மாறி மாறி பிடித்த நயன் தாரா, திரிஷா, அசின் நிலைமைகள் பரிதாபமாகி உள்ளது. இவர்களுக்கு தமிழில் புதுப்படங்கள் இல்லை.
நயன்தாரா கடைசி படம் “பாஸ் என்கிற பாஸ்கரன்”. அப் படத்துக்கு பிறகு வாய்ப்புகள் இல்லை. பிரபுதேவாவுடனான திருமணம் விவகாரத்தால் புதுப் படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தயங்குகிறார்கள்.
அசின் நடித்த “காவலன்” படம் தேர்தலுக்கு முன் ரிலீசானது. வேறு தமிழ் படங்கள் அவரிடம் இல்லை. திரிஷாவுக்கு “மங்காத்தா” படத்துக்கு பின் படங்கள் இல்லை. இப் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. முன்னணி நடிகர்களுடன் நடித்த தமன்னாவையும் “வேங்கை” படத்துக்கு பின் காணவில்லை. அதிக சம்பளமும், புது புது நாயகிகளை ஜோடியாக்க வேண்டும் என்ற கதா நாயகர்களின் ஆர்வமுமே இவர்கள் ஒதுக்கப்பட்டதற்கு காரணம் என்கிறார் தயாரிப்பாளர் ஒருவர்.
புதுமுக நாயகிகள் டாப்சி, ஹன்சிகா, அனுஷ்கா, போன்றோருக்கு படங்கள் குவிகிறது. “டாப்சி”, “ஆடுகளம்” படம் மூலம் அறிமுகமானார். ஜீவாவுடன் “வந்தான் வென்றான்” படத்தில் நடித்து வருகிறார்.
ஹன்சிகா மோட்வானி “மாப்பிள்ளை” படம் மூலம் அறிமுகமானார். “எங்கேயும் காதல்” படத்திலும் நடித்தார். தற்போது விஜய்யுடன், வேலாயுதம், உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ஒரு கல் ஒரு கண்ணாடி படங்கள் கைவசம் உள்ளன.
அனுஷ்கா அருந்ததி, சிங்கம், “வானம்” படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் “தெய்வத் திருமகள்” படத்தில் நடித்து வருகிறார். ரஜினியும் தீபிகா படுகோனேவை ஜோடியாக்கியுள்ளார். கமலும், புது நடிகையான சோனாக் ஷியுடன் ஜோடி சேருகிறார். “ராஜபாட்டை” படத்தில் விக்ரம் ஜோடியாக தீக்ஷா சேத் என்ற புதுமுக நடிகை நடிக்கிறார்.