டைரக்டர் வசந்தபாலனின் வெயில் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மதுரையை சேர்ந்த வசந்த் என்ற சிறுவன், இப்போது கோலிவுட்டில் பிஸியாக இருக்கிறார். மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த கண்ணன் - சியாமளா தம்பதியரின் மகன் வசந்த். 7ம் வகுப்பு படித்து வரும் இவர் எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவிற்கு நுழைந்தவர். வெயில் படத்திற்கு பிறகு குருவி, தோரணை, துரோகி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது எஸ்.பி.பி.சரண் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ஆரண்யகாண்டம் படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்திருக்கிறார். படத்தில் பெரிய வசனங்கள் எல்லாம் பேசி அனைவரின் பாராட்டையும் பெற்று இருக்கிறார். படம் வந்ததும் தனக்கு மிகப் பெரிய பேர் கிடைக்கும் என்று கூறும் வசந்திடம், படிப்பா அல்லது நடிப்பா என்று கேட்டால் இரண்டிலுமே சாதிக்க ஆசை என்று கூறுகிறார். தற்போது கைவசம் வந்தான் வென்றான், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, வேலூர் மாவட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருவதாக கூறுகிறார் இந்த மதுரை சிறுவன்.