"அவன் இவன்" படத்தில் பாலா, என்னை நிர்வாணமாக நடிக்க சொன்னால் கூட கண்டிப்பாக நடித்திருப்பேன் என்று கூறுகிறார் நடிகர் விஷால். "அவன் இவன்" படத்திற்கு பிறகு விஷாலின் ரேஞ்ச் எங்கோ போய்விட்டது. பலரும் இவரது நடிப்புக்கு தேசிய விருது கிடைக்கும் என்று கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி "அவன் இவன்" படத்தில் மாறு கண்ணாக நடித்ததற்காக இதனை, கின்னஸ் சாதனையாக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. தற்போது பிரபுதேவாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் விஷால் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய விஷால், பாலா சார் படத்தில் நடிச்சது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. மீண்டும் அவருடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். ஆனால், "அவன் இவன்" போன்று ஒற்றை மாறுகண் கேரக்டருக்கு, கோடி ரூபாய் கொடுத்தால் கூட இனி அதுபோன்று ஒரு கேரக்டரில் நடிக்க மாட்டேன். அவன் இவன் படத்தில் ஒவ்வொரு காட்சியையும் மிகுந்த சிரமத்தோடு நடித்தேன். அதற்கு எனக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. பாலா சொன்னதற்காக கழிவறை காட்சிகளில் கூட நடிப்பீர்களா என்று ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு விஷாலோ, பாலா சார் என்னை நிர்வாணமாக நடிக்க சொன்னால் கூட நிச்சயமாக நடித்திருப்பேன்.தேசிய விருதுக்காக விக்ரமுடன் நான் போட்டி போடுவதாக பலரும் கூறி வருகின்றனர். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. தேசிய விருது பெற இன்னும் கால அவகாசம் நிறைய இருக்கிறது. ஒருவேளை எனக்கு தேசிய விருது கிடைத்தால் நிச்சயம் சந்தோஷப்படுவேன். அதேசமயம் கிடைக்கவில்லையென்றால் கண்டிப்பாக வருத்தப்பட மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.