ஆஸ்கர் விருதை ஏ.ஆர்.ரஹ்மான் பணம் கொடுத்து வாங்கவில்லை, இது அபட்டமான பொய் என்று ஆஸ்கர் குழு விளக்கம் அளித்துள்ளது. ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக கடந்த 2009ம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று நாட்டிற்கே பெருமை சேர்த்தார். இந்நிலையில் இந்த விருதை ரஹ்மான் பணம் கொடுத்து பெற்றதாக பிரபல இசையமைப்பாளர் இஸ்மாயில் தர்பார் குற்றம் சாட்டினார். இஸ்மாயிலின் இந்த பேச்சிற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனிடையே இஸ்மாயிலின் இந்த கருத்துக்கு ஆஸ்கர் குழு பதிலளித்துள்ளது.
இதுகுறித்து அந்த குழு கூறியதாவது, ஆஸ்கர் விருதுகள் ஒருவருக்கு தவறாக வழங்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டுவது புதிதல்ல, இதுபோன்று பல புகார்கள் எழுந்துள்ளது. ஆனால் விருதை தவறான வழியில் வழங்கியுள்ளனர் என்று கூறுவதை ஏற்க முடியாது. இஸ்மாயில் தர்பாரை பற்றி எங்களுக்கு அந்தளவிற்கு தெரியாது. எதன் அடிப்படையில் ரஹ்மான் பணம் கொடுத்து விருதை பெற்றார் என்று கூறுகிறார். ஆஸ்கர் விருது தனிப்பட்ட ஒருவர் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவது அல்ல. பலரது முன்நிலையில் ஏராளமானபேரின் ஓட்டுடெடுப்புகளின் அடிப்படையில் தான் இந்த விருது வழங்கப்படுகிறது.பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் அலுவலகம் தான் இசைப்பிரிவிக்கான ஓட்டெடுப்புகளை கவனித்து வருகிறது. மேலும் அவர்கள் தான் விருது பெறுபவர்களின் பெயரை தேர்ந்தெடுப்பர். விழா மேடையில் விருது பெறுபவர்களின் பெயரை அறிவிக்கும் வரை அந்த கவர் அவர்களது பாதுகாப்பில் தான் இருக்கும். இப்படி பல விஷயங்கள் இருக்கையில், சும்மா எதையாவது வாய்க்கு வந்தபடி இஸ்மாயில் உளறுவது அர்த்தமற்றது. இவ்வாறு அந்தகுழு கூறியுள்ளது.