"முன்பே கூறியபடி, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டப்பட்டு, சங்க தேர்தல் குறித்து முடிவு எடுக்கப்பட வேண்டும். இல்லையேல், சங்கம் முன், தொடர் போராட்டம் நடத்தப்படும் என, திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு, திரைப்படத் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்த ராம.நாராயணன், செயலர் சிவசக்தி பாண்டியன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சிலரும், பதவியை, தாங்களாகவே ராஜினாமா செய்துவிட்டனர். இதனால், இச்சங்கத்திற்கு தற்காலிக தலைவராக, எஸ்.ஏ.சந்திரசேகர் நியமிக்கப்பட்டார்.சங்கத்திற்கு முறைப்படி தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என, திரைப்படத் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு குழு வலியுறுத்தியது. இதையொட்டி, "வரும் ஜூலை 3ம் தேதி, தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டப்பட்டு, தேர்தல் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என, எஸ்.ஏ.சந்திரசேகர், முன்பு அறிவித்தார். பொதுக்குழு கூட்டுவதற்கான எந்த ஏற்பாடும் இதுவரை செய்யப்படாததால், திரைப்படத் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு குழுவினர், எஸ்.ஏ.சந்திரசேகர் மீது ஆத்திரமடைந்துள்ளனர். தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், "பெப்சி தொழிலாளர்களுக்கும் இடையே, சம்பள ஒப்பந்தம், ஜனவரி 15ம் தேதிக்கு முன், பேசி முடிவு செய்திருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை; புதிய படங்களும் துவக்கப்படவில்லை.இந்நிலைகளால், "தயாரிப்பாளர்கள் சங்கப் பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க, ஜூலை 3ம் தேதி பொதுக்குழுவை கூட்டி, தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும். இல்லையேல், ஜூலை 4ம் தேதி சங்கம் முன்பாக தொடர் போராட்டம் நடத்துவோம் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், பாதுகாப்பு குழுவினருக்கும் இடையே மோதல் முற்றியுள்ளது.