Saturday, June 11, 2011
சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வரும் செவ்வாய்க்கிழமை டிஸ்சார்ஜ் ஆகிறார்.
சமீபத்தில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாருடன் போனில் தெரிவித்த ரஜினி, ராணா பட வேலைகள் எப்படிப் போகின்றன என்றும் விசாரித்தார்.
சிறுநீரக பாதிப்பு காரணமாக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை சகஜ நிலைக்கு திரும்பியது. சாதாரண உணவை சாப்பிட ஆரம்பித்துள்ளார். மருத்துவமனை வளாகத்திலேயே தொடர்ந்து நடைபயிற்சி செய்து வருகிறார்.
வழக்கமான வேக நடையும், சுறுசுறுப்பும் அவரிடம் திரும்பிவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை டிஸ்சார்ஜ்!!
ரஜினிகாந்த் இன்னும் 4 நாட்களில் சிங்கப்பூர் மருத்துவமனையிலிருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படுகிறார். என்றாலும், அவர் சிங்கப்பூரிலேயே சில வாரங்கள் தங்கியிருந்து, உடல் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்று வரவேண்டியதிருக்கும். இதற்காக சிங்கப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்திருக்கிறார்கள். மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோர் ரஜினியுடன் தங்கியிருப்பார்கள்.
ரவிக்குமாருடன் பேச்சு
நேற்று ரஜினிகாந்த் செல்போன் மூலம் சென்னையில் உள்ள இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருடன் பேசினார். அப்போது, மிக விரைவில் மருத்துமனையிலிருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படும் தகவலை தெரிவித்தார் ரஜினி.
மேலும் ‘ராணா’ படவேலைகள் எந்த நிலையில் உள்ளன என்பது பற்றியும் அவர் விசாரித்தார். அவரிடம், ‘உங்கள் உடல்நிலையை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் உடல்நிலை முழுமையாக தேறியபின் ‘ராணா’ படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம்’ என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறினார்.