உடல்நலக் குறைவால் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும், நடிகர் ரஜினிகாந்த் நலம்பெற வேண்டி அவரது ரசிகர்கள் சார்பில், வருகிற ஜூன் 12ம் தேதி உலகம் முழுவதும் சர்வமத பிரார்த்தனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராணா படம் சூட்டிங் முதல்நாளில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரஜினி, இசபெல்லா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ரஜினிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட சென்னை ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மூச்சுக்குழாய் நோய் தொற்று மற்றும் சிறுநீர பாதிப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கடந்தவாரம் சிங்கப்பூர் சென்ற ரஜினி, அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ரஜினி நலம் பெற வேண்டி அவரது ரசிகர்கள் சார்பில் உலகளவில் சர்வமத பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
என்வழி இணைய தள நண்பர்கள், ரஜினிபேன்ஸ்.காம் மற்றும் ரஜினிலைவ்.காம் சேர்ந்தவர்கள் இந்த பிரார்த்தனையை முன்னெடுத்து நடத்துகின்றனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினிகாந்த் அவர்கள் குணமடைய வேண்டி வருகிற ஜூன் 12ம் தேதி சர்வமத பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, தங்களுக்கு வசதிப்பட்ட நேரத்தில் சில நிமிடங்களை ஒதுக்கி, ரஜினி அவர்கள் குணமடைய பிரார்த்திக்க வேண்டும். கோடிக்கணக்கான மக்களின் அன்பும், பிரார்த்தனையும் ஒரு பிரமிப்பூட்டும் சக்தியாக மாறி, அவரை முற்றிலும் குணமடையச்செய்யும் என்பதை விஞ்ஞானப் பூர்வமாக மருத்துவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். இதுதான் நம்மை இந்த முயற்சியில் ஈடுபட வைத்துள்ளது.எப்படி போலியோ சொட்டு மருந்து கொடுப்பதை குறிப்பிட்ட தினத்தில், காலை தொடங்கி மாலைக்குள் செய்து முடிக்கிறார்களோ, அதுபோல இந்த பிரார்த்தனையும்குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் ஒருமுகப்படுத்தப்பட்டதாக அமைய வேண்டும். அதுவே இந்த ஒரு நாள் பிரார்த்தனையின் முக்கிய கரு. தமிழகம், இந்தியா, வெளிநாடுகள் என எங்கெல்லாம் ரசிகர்கள் உள்ளனரோ, அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த பிரார்த்தனையை மேற்கொள்ள வேண்டும். இந்த பிரார்த்தனையை நடத்தப்போவது முழுக்க முழுக்க ரசிகர்களே. இந்த ஒரு நாளில் அனைத்து ரசிகர்கள், ரசிகர் மன்ற நிர்வாகிகள் அனைவரும் இதில் பங்கேற்று அல்லது தாங்களே தங்கள் பகுதியில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். உலகம் முழுக்க நடக்கும் இந்த வழிபாட்டின் மையப் புள்ளியாக, பரங்கிப் பேட்டையில் உள்ள மகாவதார் பாபாஜி கோயில் அமைகிறது. இங்குதான் ஜூன் 12 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் வரை சிறப்பு பூஜை, சர்வமத பிரார்த்தனை நடக்கிறது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளோர், நேராக பரங்கிப் பேட்டை பாபாஜி கோயிலுக்கு வரலாம். இங்கு காலையிலிருந்தே பூஜை, சர்வமத பிரார்த்தனை மற்றும் பிற்பகலில் அன்னதானம் உள்ளிட்டவைகள் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்துகொண்டு ரஜினி நலம்பெற பிரார்த்தனை செய்யுங்கள். ஜூன் 12-ம் தேதி... ரஜினிக்கான பிரார்த்தனை தினம் என்பதை மறவாதீர்!