மெளனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நந்தா. ஆரம்பத்தில் குணச்சித்திர கேரக்டரில் நடித்து வந்த நந்தா அதன்பின்னர் ஹீரோவாக ஒன்றிரண்டு படங்களில் வலம் வந்தார். அதன்பின்னர் சிலகாலம் காணாமல் போயிருந்த நந்தாவிற்கு ஈரம் படம் நல்ல வரவேற்பை தந்தது. இந்தபடத்தில் வில்லனாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார். இந்நிலையில் இப்போது மீண்டும் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார். மாசிலாமணி படத்தை இயக்கிய டைரக்டர் மனோகர் அடுத்து வேலூர் மாவட்டம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஹீரோவாக நந்தாவும், ஹீரோயினாக பூர்ணாவும் நடிக்கின்றனர்.
வேலூர் மாவட்டத்தை பின்னணியாக கொண்டு கதை செல்கிறது. படத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக நந்தா நடிக்கிறார். இதற்காக டில்லியில் உள்ள போலீஸ் அகடாமியில் சிறப்பு அனுமதி வாங்கி கிட்டத்தட்ட 20நாட்கள் சூட்டிங் நடத்தியுள்ளனர். இந்த ரோலுக்காக நந்தாவிற்கு சிறப்பு பயிற்சியும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தபடத்திற்காக 70 கிலோவாக இருந்த தன்னுடைய எடையை 80கிலோவாக கூட்டியிருக்கிறார். தன் சினிமா கேரியரில் வேலூர் மாவட்டம் முக்கிய படமாக இருக்கும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் நந்தா.