Saturday, June 25, 2011
சினிமாவில் நாகரிகம் வளர வேண்டும் என்று கவிஞர் வாலி கூறினார். ரிச் இண்டியா நிறுவனத்தின் சார்பில் ஆர்.சந்திரசேகர் தயாரிக்கும் படம், ‘உயர்திரு நானுற்று இருபது’. பாடலாசிரியர் சினேகன், மேக்னா, வசீகரன் நடிக்கிறார்கள். மணிசர்மா இசை. இதன் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. விழாவில் கவிஞர் வாலி பேசியதாவது: சினிமாவில் நட்பும், நயத்தக்க நாகரிகமும் வளர வேண்டிய காலகட்டம் இது. யாரும் யாருடைய உணவையும் தட்டிப் பறித்து விட முடியாது. குர்ஆனில் குறிப்பிடப் படுவதைப்போல ஒவ்வொருவர் உண்ணும் அரிசியில் அவர் பெயர் எழுதப்பட்டிருக்கிறது. எனவே நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் வேறுபாடு காட்டாமல் நாகரிகத்தோடு பழக வேண்டும். தான் இசை அமைக்காத படமாக இருந்தாலும் கவிஞர் சினேகனுக்காக இந்த விழாவுக்கு வந்து பெருமைப்படுத்தியுள்ளார் யுவன் சங்கர் ராஜா. சினேகன் இதே படத்தில் மற்ற பாடலாசிரியர்களுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளார். இப்படிப்பட்ட நாகரிகம் சினிமாவுக்கு ஆரோக்கியமானது. இவ்வாறு வாலி பேசினார். விழாவில், யுவன் சங்கர் ராஜா, அபிராமி ராமநாதன், இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், களஞ்சியம், பாடலாசிரியர்கள் அறிவுமதி, கிருதியா, தயாரிப்பாளர் முரளிதரன், கலைப்புலி சேகரன், வசீகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இயக்குனர் பிரேம்நாத் வரவேற்றார். முடிவில் சினேகன் நன்றி கூறினார்.