Saturday, June 25, 2011
பழம்பெரும் நடிகை சாரதாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. சாரதாவாக பத்மப்பிரியா நடிக்கிறார். தமிழில் அறுபதுகளில் வெளியான ‘குங்குமம்’, ‘அருணகிரி நாதர்’, ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ படங்களில் நடித்தவர் சாரதா. தெலுங்கு நடிகையாக இருந்தாலும் இவர் மலையாளத்தில்தான் அதிகப்படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்காக மூன்று முறை தேசிய விருது பெற்றுள்ள இவருக்கு இப்போது 66 வயது. ஆந்திராவில் வசித்து வரும் இவரது வாழ்க்கை வரலாறு மலையாளத்தில் படமாகிறது. ஜெயராஜ் இயக்கும் இந்தப் படத்துக்கு ‘நாயிகா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் இளவயது சாரதாவாக பத்மப்பிரியா நடிக்கிறார். வயதான தோற்றத்தில் சாரதாவே நடிக்க இருக்கிறார். புகழ் பெற்ற நடிகையாக இருக்கும் ஒருவர், திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போகிறார். அவர் எங்கு போனார், ஏன் எதற்கு? என்கிற விஷயங்கள் திரைக்கதை. இதில் ஜெயராம் ஹீரோ. மம்தா பத்திரிகையாளராக நடிக்கிறார். தாமஸ் பெஞ்சமின் தயாரிக்கும் இந்தப் படம் வெளியானால், மலையாள சினிமாவின் பின்னணியில் இருக்கும் சில ரகசியங்கள் வெளிச்சத்துக்கு வரும் என்று கூறப்படுகிறது.