Thursday, July 28, 2011
வன்முறை, ஆபாச படங்களுக்கு வரிவிலக்கு ரத்து செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. கலாசாரம் சார்ந்த படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்றும், கூறப்பட்டு உள்ளது.
இது குறிதுத்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழில் பெயரிடப்பட்ட தமிழ் படங்களுக்கு சில நிபந்தனைகளுடன் முழு வரி விலக்கு அளித்தமைக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி. தணிக்கைக் குழு அனுமதிக்கும் "யு" சான்றிதழ் பெற்ற, அனைவரும் பார்க்கலாம் என்ற தமிழர் பண்பாட்டிற்கேற்ப ஆபாசமற்ற மற்றும் வன்முறை காட்சிகளைத் தவிர்த்து எல்லோரும் குடும்பத்தோடு பார்க்க கூடிய தமிழ்ப் படங்கள் தயாராவதற்கு இதுமிகச் சிறந்த வழி வகுக்கும்.
இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் ஆர். பன்னீர்செல்வம், இணைச் செயலாளர் எஸ். ஸ்ரீதர், பொருளாளர் எஸ்.ஹரிகோவிந்த் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்த் திரைப்படங்களுக்கு முழு கேளிக்கை வரி விலக்கு சான்றிதழ் பெறுவதற்கான சில புதிய நிபந்தனைகளை விதித்து வெளியிட்டமைக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
புதிய நிபந்தனைகள் தமிழ்த் திரையுலகின் தரத்தினை மேலும் உயர்த்தும். இதன் மூலம் தரமான தமிழ்த் திரைப்படங்கள் வெளிவரும். தமிழக அரசின் சார்பாக கேளிக்கை வரி விலக்கு அளிப்பதற்காக ஒரு புதிய குழுவினை அரசு நியமிக்க இருப்பதை அரசாணையின் மூலம் தெரிந்து கொண்டோம்.
தமிழகம் முழுவதுமுள்ள சுமார் 1,500 திரையரங்குகளின் பிரதிநிதியாக விளங்கும் எங்களது சங்கத்திற்கும் அந்த புதிய குழுவில் உரிய பிரதிநிதித்துவம் தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ் திரைப்பட பாதுகாப்பு கழக தலைவர் கே.ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆபாசம், வன்முறை இல்லாத குடும்ப பாங்கான படங்களுக்கு வரி விலக்கு அளித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டுகிறோம். திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என்று கூறியுள்ளார்.