
Wednesday, July 20, 2011

உடல்நலக்
குறைவால் சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய ரஜினி ஆழ்வார் பேட்டை வீனஸ் காலனியில் உள்ள மகள் ஐஸ்வர்யா வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
போயஸ் கார்டன் வீட்டில் மராமத்து பணிகள் நடப்பதால் அங்கு போகவில்லை. கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் ஓய்வெடுப்பதையும் தவிர்த்து விட்டார். மகள்கள், பேரக்குழந்தைகளுடன் இருப்பதற்காக இவ்வீட்டை தேர்வு செய்துள்ளார். அங்கேயே “ராணா” பட கதை விவாதத்திலும் ஈடுபட்டு வருகிறார். இதற்காக இயக்குனர் கே.எஸ். ரவிக் குமார் தினமும் ரஜினியை சந்திக்கிறார்.
இதற்கிடையில் தனது ஆன்மீக குரு சுவாமி தயானந்த சரஸ்வதியை சந்தித்து ஆசி பெறுவதற்காக கோவை செல்ல முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தயானந்த சரஸ்வதியின் ஆன்மீக நடவடிக்கைகளில் ரஜினிக்கு அதிக ஈர்ப்பு உண்டு. ஏற்கனவே அவரை சந்தித்து உள்ளார். ரஜினிக்கு தயானந்த சரஸ்வதி ருத்ராட்ச மாலை ஒன்றை வழங்கினார்.
அந்த மாலையை அவர் மருமகன் தனுசுக்கு பரிசாக கொடுத்துள்ளார். தயானந்த சரஸ்வதியின் 80-வது பிறந்தநாள் சதாபிஷேக விழாவை இன்று முதல் (20-ந்தேதி) வருகிற 22-ந்தேதி வரை கோவையில் கொண்டாடுகின்றனர். இந்த விழாவில் பங்கேற்க வருமாறு ரஜினிக்கு விழாக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனை ஏற்று அவர் கோவை செல்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. போக இயலா விட்டால் வேறொரு நாளிலாவது கோவை சென்று தயானந்தா சரஸ்வதியிடம் ஆசி பெறுவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் கூறப்பட்டது.