எல்லா மொழிப்படங்களில் இருந்தும் அழைப்பு வருகிறது, ஆனால் கன்னடப்பட உலகில் இருந்து மட்டும் யாருமே என்னை அணுகவில்லை, என்று நடிகை சமீரா ரெட்டி வருத்தத்துடன் கூறியுள்ளார். பாலிவுட் நடிகையாக இருந்து வந்த சமீரா ரெட்டி, இப்போது தென்னிந்திய நடிகையாகவும் மாறி நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மாறி மாறி நடித்து வந்தாலும், சமீராவுக்கு கன்னடப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாகவே இருக்கிறதாம்.
இதுபற்றி சமீரா அளித்துள்ள பேட்டியில், நான் சிறு வயதில் கன்னடப் படங்கள் பலவற்றை பார்த்திருக்கிறேன். அவை எனக்கு பிடிக்கும். ஆனால் நான் நடிகையாகி இத்தனை காலமாகி விட்டது, ஆனால் என்னைத் தேடி ஒரு கன்னடப் படமும் வரவில்லை என்பது வியப்பாக உள்ளது. அத்தனை மொழிப் படங்களிலும் என்னைக் நடிக்க கேட்கிறார்கள். கன்னடத்தில்தான் யாரும் இன்னும் அணுகவில்லை. நான் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். சரியான வாய்ப்பு வந்தால் மகிழ்ச்சியோடு நடிப்பேன், என்று கூறியுள்ளார்.