ராஜபாட்டை படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் பாபு கைதால், எந்தவிதத்திலும் படம் பாதிக்கப்படவில்லை என்று படத்தின் நாயகன் சீயான் விக்ரம் தெரிவித்துள்ளார். தமிழில் விஜய் நடித்த போக்கிரி உள்ளிட்ட படங்களையும், தெலுங்கில் பல படங்களையும் தயாரித்தவர் ரமேஷ் பாபு. இப்போது விக்ரம் நடித்து வரும் ராஜபாட்டை படத்தையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் சிலதினங்களுக்கு முன்னர், ஆந்திர நபர் ஒருவரிடம் ரூ.18கோடி மோசடி செய்தது மற்றும் அந்த நபரை, பிரபல ரவுடியை வைத்து மிரட்டியது போன்ற குற்றத்திற்காக ரமேஷை ஆந்திர போலீசாரார் கைது செய்தனர். இதனிடையே ரமேஷ் கைதால் "ராஜபாட்டை" படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்தமாதிரி பிரச்சனை எதுவும் இல்லை என்று நடிகர் விக்ரம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, ரமேஷ் கைதால் ராஜபாட்டை படத்திற்கு எந்த சிக்கலும் இல்லை. ரமேஷின் பையன்கள் இருவரும் தயாரிப்பு பொறுப்பை ஏற்றுள்ளனர். திட்டமிட்டப்படி தொடர்ந்து படப்பிடிப்புகள் நடக்கும் என்று கூறியுள்ளார். "வெண்ணிலா கபடிக்குழு", "நான் மகான் அல்ல", "அழகர்சாமியின் குதிரை" போன்ற படங்களை இயக்கிய சுசீந்திரன், அடுத்து ராஜபாட்டை படத்தை இயக்குகிறார். விக்ரம் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தீக்ஷா செத் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.