Saturday 30 July 2011
படங்கள் குறைந்தாலும் என் செல்வாக்கு சரியவில்லை -திரிஷா
Saturday, July 30, 2011
நடிகை திரிஷா திருமணம் மற்றும் செல்வாக்கு சரிவு போன்ற கிசு கிசு சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். அஜீத்துடன் அவர் நடித்த மங்காத்தா படம் ரிலீசுக்கு தயாராகிறது. திரிஷா அளித்த பேட்டி வருமாறு:-
கேள்வி:- அஜீத்துடன் நடித்தது எப்படி இருந்தது?
பதில்:- அஜீத் ஜோடியாக ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்துள்ளேன். மங்காத்தா மூன்றாவது படம். வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். மங்காத்தா ஆண்களை முன்னிலைப்படுத்தும் படம். நான் நல்ல ரோலில் வருகிறேன். ரசிகர்களை படம் கவரும்.
கே:- மங்காத்தாவில் கவர்ச்சியாக நடித்துள்ளீர்களா?
ப:- இல்லை. அப்பாவித் தனமான ரோல். அதில் எனக்கும் அஜீத்துக்குமான காதலும் இருக்கும்.
கே:- இந்திப் புதுப்படங்களில் ஒப்பந்தமாகவில்லையே?
ப:- காட்டா மிட்டாவுக்கு பிறகு சில இந்திப்பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் முக்கியத்துவம் இல்லாமல் இருந்ததால் ஒப்புக்கொள்ள வில்லை.
கே:- தென்னிந்திய நடிகைகள் இந்திப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லையா?
ப:- என்னைப் பொறுத்த வரை இந்தி திரையுலக்கு போவது என்பது பெரிய ஸ்டெப். அங்கு முழு கவனத்தையும் செலுத்தினால் முன்னேற முடியும். எனக்கு சென்னையை விட்டு போக விருப்பம் இல்லை. இங்கும் அங்கும் போய் வந்து கொண்டிருப்பது கஷ்டமான ஒன்று.
கே:- படங்களை தேர்வு செய்வதில் ரொம்ப கவனம் செலுத்துகிறீர்களா?
ப:- ஆமாம். மாதம் 30 நாட்களும் நடிக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது.
கே:- நீங்கள் முன்பு போல் பிரபலமாக இல்லையே?
ப:- நான் அப்படி நினைக்க வில்லை. குறிப்பிட்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதால் அப்படி நினைக்கலாம். வந்த படங்களையெல்லாம் ஒப்புக்கொண்டு நடித்து இருந்தாலும் என்னை விமர்சிப்பார்கள். நடிகைகள் சினிமாவில் இருப்பது குறைவான நாட்கள்தான். இதில் நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்கவேண்டும். ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் என் செல்வாக்கு சரிய வில்லை.
கே:- நிறைய நடிகைகள் வருகிறார்களே, போட்டியை எப்படி சமாளிக்கிறீர்கள்?
ப:- நான் போட்டியாக யாரையும் நினைக்கவில்லை. 10 வருடங்களுக்கு முன்பு சினிமாவுக்கு வந்தேன். என் திறமையால் இன்னும் நடித்துக்கொண்டு இருக்கிறேன். புதுமுக நடிகைகள் எனக்கு போட்டியில்லை. பத்து வருடங்களுக்கு முன் என்னோடு அறிமுகமான நடிகைகளைத் தான் போட்டியாக கருதுகிறேன். புதுமுகங்கள் வருகை என்பது புதிய டிரெண்ட்.